அதிமுகவின் "இரட்டை இலை' சின்னம் சசிகலா தலைமையை ஏற்றுள்ள எங்களுக்கே கிடைக்கும் என்று அக்கட்சியைச் சேர்ந்த மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது: அதிமுகவில் உள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றுபட்டு சசிகலா தலைமையில் ஒற்றுமையாக உள்ளனர். ஜெயலலிதா நடத்தி வந்த நல்லாட்சி தமிழகத்தில் தொடரும். மீதமுள்ள ஆட்சிக் காலத்தை அதிமுக தலைமையிலான அரசு நிறைவு செய்யும்.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அதிமுகவை எம்.ஜி.ஆர் நிறுவினார். அதனால்தான் அவரது கொள்கைப்படி கட்சியை ஜெயலலிதா நடத்தி அனைவரையும் வழிநடத்தி வந்தார். கட்சியின் உண்மையான அதிமுக தொண்டர்களுக்கும் இதே உணர்வுதான் உள்ளது. ஆர்.கே. நகர் தொகுதியில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெற்றி பெறுவார்.
உண்மையான அதிமுகவில் அங்கம் வகிக்கும் எங்களுக்கே "இரட்டை இலை' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கும் என நம்புகிறோம். தமிழ்நாட்டில் எப்போது தேர்தல் வந்தாலும் சசிகலா தலைமையை ஏற்றுள்ள அதிமுகவே வெற்றி பெறும் என்றார் தம்பிதுரை.