திருவனந்தபுரம்: முடிந்தால் தலைமையேற்று கட்சியை வழி நடத்துங்கள்..இல்லையென்றால் ராஜிநாமா செய்து விட்டு செல்லுங்கள் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை கேரள இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
கேரளா இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சி.ஆர்.மகேஷ். இவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு:
கட்சிக்கு பொறுப்பேற்று வழி நடத்தும் ஈடுபாடு இல்லை என்றால் ராகுல் காந்தி கட்சியில் இருந்து ராஜிநாமா செய்து விடலாம்.
ராகுல், முதலில் நீங்கள் உங்கள் கண்களை திறந்து பாருங்கள். பலமான ஒரு கட்சியாக வேரூன்றி இருந்த காங்கிரஸ் கட்சியானது இன்று பிடுங்கி எறியப்பட்டு கொண்டிருக்கிறது.
கேரளவில் இருந்து மாணவர் சங்கங்களின் உதவியோடு தேசிய அளவில் பெரிய தலைவர்களாக உருவெடுத்த ஆண்டனி உள்ளிட்டவர்கள் கூட தற்போதைய நிலைமையில் 'மவுன சாமியார்களாக' இருக்கிறார்கள்.
கேரளமாநில காங்கிரஸ் தலைவராக இருந்த வி.எம்.சுதீரன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைக் குறிப்பிட்டுள்ள மகேஷ், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்ய வேண்டிய நேரத்தில், காங்கிரஸ் இங்கே தலைமை இன்றி தவித்துக் கொண்டிருக்கிறது.
மிகப்பெரும் பிரச்சினையை மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கட்சித் தலைமை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு மகேஷ் தனது கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.