குஜராத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றிய அஞ்சல் துறை உயரதிகாரிகள் இருவரை சிபிஐ திங்கள்கிழமை கைது செய்தது.
ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட நவம்பர் 8-ஆம் தேதிக்கு அடுத்த நாள், குஜராத் மாநிலம், நவரங்கபுரா பகுதியின் தலைமைப் தபால் நிலையத்தில் ரூ.6 லட்சத்து 59 ஆயிரத்து 800 மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.100, ரூ50 நோட்டுகளாக மாற்றிக் கொடுக்கப்பட்டிருந்தன. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையின்போது ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ஆமதாபாத் தலைமை அஞ்சல் நிலையத்தில் பணியாற்றி வந்த அஞ்சல் துறை இயக்குநர் மனோஜ் குமார், மூத்த கண்காணிப்பாளர் சஞ்சய் அகாரே ஆகியோர் ரூ.1 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை கடந்த நவம்பர் 9-ஆம் தேதி சட்டவிரோதமாக அஞ்சல் நிலையத்தில் மாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை, 3 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த முறைகேட்டில் தொடர்புடைய மேலும் ஒருவரை சிபிஐ அதிகாரிகள் தேடி வருகின்றனர்.