மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய 100 மனிதர்களுக்கான "டைம்' பத்திரிகையின் பட்டியலில், மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இடம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "டைம்' பத்திரிகை, மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய உலகின் தலைசிறந்த 100 மனிதர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுதான் இறுதிப் பட்டியலைத் தயாரிக்கும் என்றாலும், அதற்கு முன்னர் இதுகுறித்த பொதுமக்களின் கருத்தை அறிவதற்காக பிரபலங்களின் பெயர்களை இணையதள வாக்கெடுப்புக்கு விடும்.
அந்த வாக்கெடுப்பில் இடம் பெறவிருக்கும் தலைவர்களின் பட்டியலில் மோடியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. 2015-ஆம் ஆண்டுக்கான தாக்கத்தை ஏற்படுத்திய 100 மனிதர்களில் ஒருவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும், கடந்த ஆண்டுக்கான "டைம்' பத்திரிகையின் இணையதள வாக்கெடுப்பிலும் மோடியின் பெயர் இடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இந்த வாக்கெடுப்பில் மோடியைத் தவிர, மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமைச் செயலதிகாரி சத்யா நாதெள்ளா, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மகள் இவாங்கா மற்றும் மருமகனும், அதிபர் மாளிகை ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, சீன அதிபர் ஜீ ஜின்பிங், கத்தோலிக்க மதகுரு போப் பிரான்சிஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.