புது தில்லி: புது தில்லியில் கடந்த 14 நாட்களக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய சங்க விவசாயிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவும் நிலையில், விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்; அனைத்து நதிகளை நீர்வழிப் பயணத் திட்டத்தின் மூலம் இணைக்க வேண்டும்; விவசாய விளை பொருள்களுக்கு லாபகர விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 14-ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து 14 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்க விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தில்லி வந்துள்ள உத்தரப்பிரதேச விவசாயிகள், தமிழக விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், தமிழக விவசாயிகள் நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராடி வருகிறார்கள். அவர்களுடைய பிரச்னை அனைத்து விவசாயிகளின் பிரச்னை. அகில இந்திய அளவில் விவசாயிகளின் நிலை ஒரே மாதிரியாகவே உள்ளது. வறட்சி நிலவும் இந்த காலத்தில் எங்களுக்கு இருக்கும் பிரச்னையை போலவே அவர்களும் பிரச்னையை அனுபவித்து வருகிறார். எனவே, அவர்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவித்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.