நொய்டா: புகழ்பெற்ற சீன அலைபேசி தயாரிப்பு நிறுவனமான ஒப்போவின் நொய்டா அலுவலக சீன ஊழியர் ஒருவர், இந்திய தேசிய கொடியின் படத்தை கிழித்து அவமரியாதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த புகழ்பெற்ற அலைபேசி தயாரிப்பு நிறுவனம் ஒப்போ.இதன் தயாரிப்பு அலுவலகம் தலைநகர் தில்லிக்கு அருகே உள்ள நொய்டாவில் அமைந்துள்ளது. அங்கு தயாரிப்பு நிர்வாகியாக சீனாவைச் சேர்ந்த சுஹாஹு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த திங்கள் அன்று மாலை அலுவலகத்தின் சுவரின் ஒட்டியிருந்த இந்திய தேசியக் கொடியின் படத்தைக் கிழித்து குப்பைத்தொட்டியில் வீசியுள்ளார். இந்தக்கொடி யானது கடந்த ஜனவரி 26-ஆம் தேதியன்று நிறுவன வளாகத்தில் குடியரசு தினம் கொண்டாடிய பொழுது ஒட்டப்பட்டதாகும். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்குள்ள இந்திய ஊழியர்கள் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
மறுநாள் காலை அலுவலகத்தின் வாயில் கதவருகே கூடிய ஊழியர்கள் சுஹாஹு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தேசிய கொடியை அவமதித்தாக சுஹாஹு மீது ஊழியர்கள் சார்பில் காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
ஊழியர்களின் போராட்டத்தால் கவலையடைந்த நிர்வாகம் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டது. அதில் திங்களன்று நடந்த சம்பவத்தினை தொடர்ந்த நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சுஹாஹு ஒப்போ நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்படுகிறார். இது தனிப்பட்ட ஒருவருடைய செயலாகும். இதற்கும் நிறுவனத்திற்கும் தொடர்பில்லை. நாங்கள் இந்தியாவின் சட்டங்களையும், மக்களின் நம்பிக்கைகளையயும் வெகுவாக மதிக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.