புதுதில்லி: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான அலஹாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வானது, 'சுப்பிரமணியன் சுவாமி இந்த வழக்கின் தொடர்புடைய கட்சிக்காரராகளில் ஒருவர் என்று நீதிமன்றம் முதலில் கருதியது எனவும், ஆனால்பிறகு பத்திரிக்கை செய்திகளின் மூலம்தான் அவர் வெறும் தனியான மனுதாரர் என்று தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டனர்.
அவரை வழக்கோடு தொடர்புடையவர் என்று கருதித்தான் கடந்த 21-ஆம் தேதி அன்று நடந்த வழக்கு விசாரணையின் பொழுது, இந்த வழக்கில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. தேவைப்பட்டால் தானே பேச்சு வார்தையில் நடுவராக இருப்பதாக தலைமை நீதிபதி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தன்னுடைய அடிப்படை மத வழிபாட்டு உரிமை பாதிக்கப்படுவதால் மட்டுமே தான் இந்த வழக்கில் மனுதாரராக இணைந்ததாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். பின்னர் வழக்குகளை விரைவாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.