சென்னை: பிஎஸ்3 தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களை ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்கவோ, பதிவு செய்யவோ தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வாகனங்களை, தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய வாகன விற்பனை டீலர்கள் முடிவு செய்துள்ளனர்.
உற்பத்தி முடிந்து விற்பனைக்கு இருந்த சுமார் 6.7 லட்சம் வாகனங்களை இரண்டு நாளைக்குள் விற்பனை செய்வதற்காக நேற்று அனைத்து வாகன விற்பனை டீலர்களும் அதிரடி சலுகைகயை அறிவித்தனர்.
அதன்படி, ஹோண்டா நிறுவனம் தனது பிஎஸ்3 சான்று பெற்ற வாகனங்களை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை சலுகை விலையில் விற்பனை செய்வதாக அறிவித்தது.
மார்ச் 31 முதல் அல்லது வாகன இருப்பு இருக்கும் வரை இந்த சலுகை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டதால், நேற்று மாலையே வாகன விற்பனை நிலையங்களில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.
சலுகை விலை என்பதால் ஏராளமான கடைகளில் ஒரே நேரத்தில் பல வாகனங்கள் விற்று தீர்ந்தன. இரவு நேரத்திலும் வாகனப் பதிவுப் பணிகள் நடந்தன.
பல இடங்களில் தற்போது இரு சக்கர வாகன விற்பனை மேளாக்களும் நடந்து வருகின்றன. இங்கும் இளைஞர்களின் கூட்டம் அலை மோதுகின்றன. வாகன விற்பனை மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
• ஹீரோ நிறுவன வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் 12,500 வரையிலும் விலையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
• ஹோண்டா நிறுவன வாகனங்களுக்கு ரூ.22,000 வரையிலும் விலையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
• டிவிஎஸ் வாகனங்களுக்கு ரூ.20,150 வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
• சுசுகி நிறுவனம் ரூ.5 ஆயிரம் தள்ளுபடி வழங்கிய நிலையில், பஜாஜ் நிறுவன வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது.
சில நிறுவனங்கள், வாகனங்களுடன் ஹெல்மெட், இன்ஷ்யூரன்ஸ் போன்றவற்றை இலவசமாக அளிப்பதாகவும் அறிவித்துள்ளது.
இவ்வளவு சலுகைகளுக்குப் பிறகும் விற்பனையாகாத வாகனங்களை, பிஎஸ்3 தடையில்லா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத் தவிர வேறு வழியில்லாததால் வரலாறு காணாத அளவுக்கு விலையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.