இந்தியாவில், அரசு சேவையைப் பெற 10ல் 7 பேர் லஞ்சம் கொடுப்பதாக ஆசிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவை ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான மோடி அரசின் தாரக மந்திரமே 'ஊழலற்ற இந்தியா' என்பதே. ஆனால், அவர்கள் தங்களது தாரக மந்திரத்தை நிறைவேற்ற இன்னும் பல ஆண்டுகள் பயணிக்க வேண்டிய நிலை இருப்பது தெரிய வந்துள்ளது.
ஊழல் ஒழிப்பு சர்வதேச சமூக அமைப்பின் டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் (டிஐ), ஆசியாவின் 16 நாடுகளின் ஊழல் நிலை குறித்து நடத்திய ஆய்வில், இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் 10ல், 7 பேர் லஞ்சம் கொடுத்துத்தான் அரசின் பொதுச் சேவையைப் பெறுகிறார்கள். இந்த ஆய்வுப் பட்டியலின் கடைசி இடத்தில் இருப்பது ஜப்பான். இங்கு ஊழல் என்பது 0.2% அளவிலேயே இருக்கிறது.
"மக்கள் மற்றும் ஊழல் : ஆசியா பசிபிக்" என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 22 ஆயிரம் மக்களிடம் ஊழல் குறித்து கருத்துக் கேட்டனர்.
பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் சீனாவும், இந்தியாவுக்குப் பின்னால்தான் உள்ளது. இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் லஞ்சமும் ஊழலும் அதிகரித்திருப்பதாகவே ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.
ஊழலுக்கு எதிராக அரசுகள் நடவடிக்கை எடுக்கின்றனவா என்ற கேள்விக்கு, இந்தியா, இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த மக்கள், தங்கள் அரசுகள் ஊழலை ஒழிக்க சிறப்பாக பணியாற்றி வருவதாகவே கருத்துக் கூறியுள்ளனர்.
மேலும், காவல்துறையில் நடக்கும் ஊழலில் இந்தியா 54 சதவீதமாகவும், சீனா 12 சதவீதமாகவும் இருக்கிறது.
அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் என அனைத்துத் துறைகளிலும் இந்தியாவே ஊழலில் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளன. இங்கு ஏழை, எளிய மக்களின் அடிப்படை சேவையைக் கூட லஞ்சம் கொடுத்துத்தான் பெறும் நிலை உள்ளது.
நமது அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தானை விட, பல துறைகளில் நடக்கும் ஊழலில் இந்தியாவே மிக அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது.
மேலும் இதுபோன்ற லஞ்ச லாவண்ய நடவடிக்கைகளால் ஏழை மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றும், லஞ்சம் கொடுப்பவர்களுக்கு அரசு சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் கிடைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.