புது தில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூலை 10 ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் விஜய் மல்லையாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளிடம் கடன் பெற்று திருப்பி செலுத்தாதது குறித்து வங்கிகள் சம்மேளனம் தொடர்ந்த வழக்கில், நேரில் ஆஜராகாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்திய பொதுத் துறை வங்கிகள் உட்பட பல வங்கிகளில் 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், வங்கிகளிடம் கடன் பெற தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து மதிப்பு குறித்து தவறான தகவல் அளிக்கப்பட்டிருப்பதாகவும் வங்கிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.