சண்டிகர்: தில்லி - சண்டிகர் இடையே விரைவில் இயக்கப்பட உள்ள அதி வேக விரைவு ரயிலில் வை-ஃபை சேவை, எல்சிடி டிவி, யுஎஸ்பி சார்ஜிங் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தேஜாஸ் விரைவு ரயிலில் பயோ - டாய்லெட் வசதியும் அறிமுகமாகிறது. நாட்டின் முதல் பயோ டாய்லெட் வசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விரைவு ரயில், மே 15ம் தேதி ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து வடக்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இது ஒரு மணி நேரத்துக்கு 160 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் என்றும், 200 கி.மீ. வேகத்திலும் பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரயில் இந்த மாத இறுதியில் அல்லது ரயில்வே உயர் அதிகாரிகளின் முடிவின்படி, தண்டவாளத்தில் தனது பயணத்தைத் தொடங்கும் என்று ரயில்வே மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
மேலும் சிறப்பம்சமாக, இந்த ரயிலில் வை-ஃபை வசதியும், ஒவ்வொரு ரயில் இருக்கையிலும், அவசர உதவிக்கு அழைக்கும் 'பெல்' (விமானத்தில் இருப்பது போல) அமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது.