பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான தகவலைத் தெரிவித்ததற்காக கூகுள் இணையதளத்துக்கு எதிராக உத்தரப் பிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் நந்தகிஷோர் என்பவர் ஷாஜகான்பூர் காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒரு புகாரை அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
நான் கடந்த 2015-இல் கூகுள் இணையதளத்தில் தேசியச் செய்திகளைத் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது அதில் இடம்பெற்றிருந்த ஒரு பட்டியலில் அவதூறான வகையில் மோடியைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கருத்தானது எனக்கும் மற்றவர்களுக்கும் மனக் காயத்தை ஏற்படுத்தியது. எனவே, அவதூறான தகவலுக்காக கூகுள் இணையதளத்தின் மீது தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நந்தகிஷோர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக ஷாஜகான்பூர் (நகரம்) காவல்துறைக் கண்காணிப்பாளர் கமல் கிஷோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், "வழக்குரைஞர் நந்தகிஷோரின் புகாரின்பேரில் ஐடி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் கூகுள் இணையதளம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
இந்த விவகாரம் பற்றி கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, "இப்புகார் தொடர்பாக எங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வரவில்லை. எனவே, அது குறித்து கருத்து கூற இயலாது' என்று தெரிவித்தார்.