விஜயவாடா: புற்றுநோய் பாதித்த சிறுமி, தனது சிகிச்சைக்கு பண உதவி செய்யுமாறு தந்தையை கெஞ்சும் நெஞ்சை கனக்கச் செய்யும் விடியோ, அவரது மரணத்துக்குப் பிறகு சமூக தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த விடியோவில், 13 வயதாகும் சாய் ஸ்ரீ என்ற சிறுமி, தனக்கு வந்த எலும்புமஞ்சை புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க வீட்டை விற்று பணம் கொடுக்குமாறு தந்தையை கெஞ்சுகிறார்.
இந்த விடியோவை, தனது தந்தையின் வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார். இந்த நிலையில், சாய்ஸ்ரீ புற்றுநோய் பாதித்து உயிரிழந்தார்.
இது குறித்த முதற் கட்ட விசாரணையில், சாய்ஸ்ரீக்கு புற்றுநோய் ஏற்பட்டதை அடுத்து, அவரது தந்தை, மனைவி மற்றும் மகளை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ போண்டா உமாமகேஷ்வர ராவ் உதவியுடன், அடியாட்களைக் கொண்டு மிரட்டி இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்த குண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் ஆந்திர காவல்துறையினர் தயங்குகிறார்கள்.
இது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தின் நாங்கள் மனு கொடுத்துள்ளோம். மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவோம் என்று சிறார் நல பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கூறுகிறார்.
தன்னிடம் போதுமான அளவுக்குப் பணம் இருந்தும், தான் பெற்ற மகளுக்கு சிகிச்சை அளிக்க அவரது தந்தை மறுத்துள்ளார். இது குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு காவல்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.