தகவல் தொழில்நுட்பத் துறையில் நடப்பாண்டில் பெரிய அளவிவான வேலை இழப்புகள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கூறியதாவது:
பணியாளர்களைக் குறைக்கப் போவதாக கருதப்பட்ட சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில் பெரிய அளவிவான வேலை இழப்புகள் எதுவும் இருக்காது என தெளிவுபடுத்தியுள்ளன. நிறுவனங்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பணி மதிப்பீட்டின் கீழ், சில பணியாளர்களின் ஒப்பந்தக் காலம் புதுப்பிக்கப்படாமல் போகலாம். இதை வைத்து மட்டும், இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் வேலை இழப்பார்கள் என்று கருதுவது தவறாகும்.
இதுதொடர்பாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உறுதியான உத்தரவாதத்தை அளித்துள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறை ஆண்டுதோறும் 8 முதல் 9 சதவீத வளர்ச்சியைக் கண்டு வருகின்றன. இந்நிலையில், இந்த வளர்ச்சி விகிதத்தில் திடீரென்று சரிவு ஏற்பட்டுவிடும் என்பது தவறான வாதமாகும்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும், தகவல் தொழில்நுட்பத் துறையில் 5 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பிரச்னையை முழுமையாக ஆராய வேண்டியது அவசியம் என்றார் அருணா சுந்தரராஜன்.
அண்மையில் விப்ரோ, இன்ஃபோசிஸ், காக்னிஸன்ட், டெக் மஹிந்திரா உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்களில் வேலை இழப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனால், அடுத்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வேலையை இழக்க உள்ளதாக அச்சம் நிலவுகிறது.