இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்டு நரேஷ் உள்ளிட்டோரை கைது செய்து தில்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இவ்வழக்கில் ஜாமீன் கோரி தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர் சார்பில் தனித்தனி ஜாமீன் மனுக்கள் தில்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் பாபுபாரத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தினகரன் ஜாமீன் மனு மீதான விசாரணை மே 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக இவ்வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிவி தினகரனின் நீதிமன்றக் காவல் வரும் 29ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.