குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவதில், எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை அதிகரித்து வருகிறது; இது, மத்திய பாஜக அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: எப்போதெல்லாம் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் மத்திய பாஜக அரசு அச்சமடைந்துவிடும். இப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை அதிகரித்து வருகிறது. இதனால், மத்திய அரசு அச்சமடைந்துள்ளது. அதன் வெளிப்பாடே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ஆகியோரின் வீடுகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிபிஐ, வருமான வரித் துறை சோதனைகளாகும்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் சூழலில், தங்களது நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து மக்கள் கேள்வியெழுப்புவர் என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன என்றார் மணீஷ் திவாரி.