நாட்டின் முக்கியமான 91 நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது.
இந்த நீர்த்தேக்கங்களில் மொத்த கொள்ளளவில் 23 சதவீதம் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதுகூட வாரம்தோறும் ஒரு சதவீத அளவுக்குக் குறைந்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கோடை வெயில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகமாக உள்ளது. இதனால், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு கடந்த ஓராண்டில் வேகமாகக் குறைந்துவிட்டது.
அதேநேரத்தில் பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம், திரிபுரா, குஜராத், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நீர் இருப்பு ஓரளவுக்கு சிறப்பாக உள்ளது.
நாகார்ஜுன சாகர், இந்திரா சாகர், பக்ரா அணைகளில் மே 18-ஆம் தேதி நிலவரப்படி, 35.622 பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீல் உள்ளது.
கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் இந்த நீர்த்தேக்கங்களில் 123 சதவீத தண்ணீர் இருப்பு இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 104 சதவீத நீர் இருப்பு இருந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.