பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 3 ஆண்டுகால சாதனைகளை விளக்குவதற்காக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான குழு பிகாருக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது.
இக்குழுவில் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா, மத்திய அமைச்சர்கள் சாத்வி நிரஞ்சன் ஜோதி, பாஜக எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மோடி தலைமையிலான அரசு வரும் 26-ஆம் தேதியுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை முன்னிட்டும், பிகாரில் பாஜகவின் செல்வாக்கை அதிகரித்து அடுத்த மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கிலும் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து பிகார் மாநில பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி பாட்னாவில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
எங்கள் கட்சியின் தேசிய, மாநிலத் தலைவர்கள் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கி பிகாரில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். மே 25-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை இந்த பிரசாரம் நடைபெறும். எனினும், முக்கியத் தலைவர்களின் பிரசார தேதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. பிகாரில் மட்டுமின்றி நாடு முழுவதும் இதுபோன்று மத்திய அரசின் சாதனைகளை விளக்கி தலைவர்கள் பிரசாரம் செய்வார்கள் என்றார்.