புதுதில்லி: தில்லி சாந்தினி சவுக் மோதி பஜார் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
ஜவுளி வர்த்தகத்துக்கு பேர் போன சாந்தினி சவுக் மோதி பஜார் பகுதியில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த ஜவுளி வகைகள் எரிந்து தீ கொளுந்து விட்டு எரிந்தது. தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு 30 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் காயங்கள், உயிர் சேதங்கள் எதுவும் இல்லை. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
தீ விபத்துக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.