ரூ.17,000 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும்: பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தல்

மத்திய திட்டங்களுக்காக மாநில அரசு செலவிட்ட தொகையில் நிலுவையில் வழங்கப்பட வேண்டிய ரூ.17 ஆயிரம் கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம்
தில்லியில் பிரதமர் நரேந்திரமோடியை புதன்கிழமை சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வணக்கம் தெரிவித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
தில்லியில் பிரதமர் நரேந்திரமோடியை புதன்கிழமை சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வணக்கம் தெரிவித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

மத்திய திட்டங்களுக்காக மாநில அரசு செலவிட்ட தொகையில் நிலுவையில் வழங்கப்பட வேண்டிய ரூ.17 ஆயிரம் கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினார்.
தில்லிக்கு இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை இரவு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் புதன்கிழமை காலை 11.15 மணிக்கு சந்தித்துப் பேசினார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், செயலாளர் சிவதாஸ் மீனா, முதல்வரின் உறவினர் மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் 40 நிமிஷங்கள் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி அளித்தார். அதன் முக்கிய அம்சங்கள் குறித்து பின்னர் தமிழ்நாடு இல்லம் திரும்பிய முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
நீட் தேர்வுக்கு விலக்கு: தமிழக மாணவர்களின் நலன் கருதி, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இருக்கைகளுக்கு 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைக்க ஒப்புதல் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்க் காப்பீட்டுத் தொகை விரைவில் கிடைக்கும் வகையில் மத்திய நீர் வள அமைச்சகம் மூலம் காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன். தற்போது, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. வறட்சியால் தென்னை மரம் பட்டுப்போயிருந்தால் அந்த விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதில் விவசாயிகள் யாரும் விடுபட்டிருந்தால், இது தொடர்பாக தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டால் நிவாரணம் கிடைக்க உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி விவகாரம்: காவிரிப் படுகையில் உள்ள பாசன ஆதாரங்களை மேம்படுத்தவும் புனரமைக்கவும் ரூ.16,500 கோடியிலான ஒரு திட்டத்தை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. அதற்கு விரைவில் ஒப்புதல் வழங்கி அதை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது. அதை உடனடியாக தடுத்து நிறுத்த கேரள அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை தாமதமின்றி அமைக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
நதிகள் இணைப்பு: கடலில் வீணாகக் கலக்கும் பம்பை - அச்சன்கோயில் - வைப்பாறு நதி நீரை தமிழகத்துக்குத் திருப்பி விடும் திட்டத்தின் மூலம் மின்சாரம் கிடைக்க வகை செய்யும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கேரள அரசுக்கு அறிவுரை வழங்குமாறும் கேட்டுக் கொண்டேன்.
தமிழக அரசின் குடிமராமத்து நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் ரூ.300 கோடி மதிப்பீட்டில் மக்கள் - விவசாயிகள் பங்களிப்புடன் ஏரி, குளங்கள் தூர்வாரி பராமரிக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தை மக்கள் பேரியக்கமாக மாற்ற இந்த ஆண்டு ரூ. 300 கோடியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்துக்கு 2017-2018 நிதியாண்டில் ரூ.500 கோடியை மத்திய அரசு மானியமாக வழங்க வேண்டும் என்று கோரியுள்ளேன்.
நிலுவைத் தொகை: தமிழக அரசு நிறைவேற்றி வரும் மத்திய அரசின் திட்டங்களுக்காக செலவிட்ட ரூ.17,333.28 கோடியில் மிகச் சிறிய தொகை மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.16,959.04 கோடியை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளேன். இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள இந்திய மீனவர்களின் 135 படகுகளை விடுவிக்கவும், சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 11 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
கடந்த முறை பிரதமரைச் சந்தித்த போது, மீனவர்கள் பலன் அடையும் வகையில் மீன் வள சிறப்புத் தொகுப்புத் திட்டத்துக்கு நிதி வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.86 கோடியை ஒதுக்கியுள்ளதையும் குறிப்பிட்டேன். இதையடுத்து, மத்திய அரசு அதன் பங்காக ரூ.200 கோடியை ஒதுக்கியது. இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தேன் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அரசியல் இல்லை: இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, 'தமிழக அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும்தான் பிரதமரைச் சந்தித்துப் பேசினேன். அரசியல் குறித்து அவரிடம் ஏதும் பேசவில்லை' என்றார்.
பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படம்: விழாவில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு
தமிழக சட்டப்பேரவைக்குள் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத் திறப்பு விழா, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.
இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியது: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை தமிழக சட்டப்பேரவைக்குள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமரை கேட்டுக் கொண்டேன். இதேபோல, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அரசின் சார்பில் ஓராண்டு கொண்டாட வேண்டும் என்று தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது அறிவித்தார். அதன்படி ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் தற்போதைய அரசு, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை வரும் டிசம்பர் மாத இறுதியில் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறும் பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன் என்றார் எடப்பாடி பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com