சண்டிகார்: பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் டிஜிபியும், காலிஸ்தான் தீவிரவாதிகளை அடக்குவதில் பெரும்பங்கு வகித்தவருமான கே.பி.எஸ்.கில் (82) இன்று மாலை காலமானார்.
1980-களின் பிற்பகுதியில் பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகளின் ஆதிக்கமிருந்தது. அதனைக் கட்டுப்படுத்த 1988-ம் ஆண்டு நடைபெற்ற 'ஆப்பரேஷன் பிளாக் தண்டர்' எனப்படும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர் கேபிஎஸ்.கில் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பதவி ஓய்வுக்கு பிறகு 2000-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் தாக்குதல் உத்திகளை வகுக்க இலங்கை அரசு கில்லை ஆலோசகராக அழைத்தது குறிப்பிடத்தக்கது.2002-ல் குஜராத் கலவரங்களுக்குப் பிறகு மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, மாநில பாதுகாப்பு ஆலோசகராகவும் கில் செயல்பட்டார் .
சமீபமாக சிறுநீரக கோளாறு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த கில், கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது.