குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் போட்டியிட விரும்பினால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) அவர் இணைய வேண்டும் என்று மத்திய சமூக நீதித் துறை அமைச்சரும், இந்திய குடியரசு கட்சித் தலைவருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம், தாணேவில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. இதுகுறித்த இறுதி முடிவை தேசிய ஜனநாயகக் கூட்டணி விரைவில் எடுக்கும்.
இந்தத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் சரத் பவாரை நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உண்மையில், பவார் இத்தேர்தலில் போட்டியிட விரும்பினால் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியுடன், சரத் பவாருக்கு நல்ல உறவு உள்ளது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். மகாராஷ்டிர அமைச்சர் திலீப் காம்ப்லே, பத்திரிகையாளர்களுக்கு எதிராக அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். உண்மையில், பத்திரிகையாளர்கள் நமது நண்பர்களைப் போன்றவர்கள். நம்மிடம் கேள்வி கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்றார் ராம்தாஸ் அதாவலே.