புதுதில்லி: சட்டத்துக்கு புறம்பாக முறைகேடான வழியில் ஆதாயம் பெறும் நான்கு மத்திய அமைச்சர்கள்: பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் அஜித் தோவால். இவரது மகன் சவுர்யா தோவால்.இவர் இந்தியா பவுண்டேசன் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார். பொதுவாக வாடிக்கையாளர்களுக்கு நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வரும் பணிகளை அந்நிறுவனம் மேற்கொள்கிறது.
இந்த நிறுவனத்துக்கு பல வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் உள்ள முக்கியமான பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்தும் நிதி வருகிறது. இந்த நிறுவங்களில் பெரும்பான்மையானவை மத்திய அரசுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பு கொண்டுள்ளவையாகும்.
அந்த நிறுவனத்தில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாரமன், சுரேஷ் பிரபு, ஜெயந்த் சின்கா மற்றும் எம்.ஜே. அக்பர் ஆகிய நான்கு பேரும் இயக்குனர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்தின் மூலமாக நான்கு மத்திய மந்திரிகளும், சவுர்யா தோவாலும் ஆதாயம் அடைந்து வருவதாக ஊடகங்களில் பரவலாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சட்டத்துக்கு புறம்பாக முறைகேடான வழியில் ஆதாயம் பெறும் நான்கு மத்திய அமைச்சர்கள்: பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.