ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 9-ந் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ல் நடைபெறுகிறது.
இதையடுத்து அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் அங்கு முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹிமாச்சலப்பிரதேசத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசியதாதவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. சுலபமாக தொழில் செய்யும் நாடுகளின் பட்டியலில் 30 இடங்கள் முன்னேறியுள்ளது சிறந்த சாதனையாகும். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் வரி செலுத்துவதில் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டுள்ளது.
இதனால் சரிவில் இருந்த பொருளாதாரம் மீண்டும் உயர்ந்து வருகிறது. ஆனால் இவற்றுக்கு மாறாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால் அங்கு ஏற்படும் வளர்ச்சி சீர்கெடும். அவர்களால் திறம்பட செயலாற்ற முடியாதது மட்டுமே இதற்கு காரணம்.
அதுவே பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து நாட்டின் வளர்ச்சியை நோக்கி மட்டுமே அதன் செயல்கள் பயணிக்கின்றன. சமீபத்தில் சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. எனவே இதுவரை இல்லாத அளவில் அங்கு வளர்ச்சி மேம்பட்டு வருகிறது. அதுவே இதற்கு சிறந்த சான்றாகும் என்றார்.