தில்லியில் சமீபகாலமாக காற்றில் ஏற்பட்டுள்ள மாசு அளவு பெருகி வருகிறது. இதனால் காற்றில் நச்சுத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்குள்ள மக்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறு மற்றும் இருதயக் கோளாறு ஏற்பட்டு வருகிறது.
தற்போது வழக்கத்துக்கும் மாறாக தில்லியில் கடும் பனிப்பொழிவும் ஏற்பட்டு வருவதால் இதன் விளைவு அதிகரித்து வருகிறது. எனவே காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் விதமாக தில்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தில்லியில் மீண்டும் ஒற்றை இலக்க, இரட்டை இலக்க வாகன முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அங்குள்ள பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளிப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சுகாதாரத்துறை, எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் அனைரும் பொதுப் போக்குவரத்துச் சேவையை அதிகம் பயன்படுத்தும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் முதல்கட்டமாக மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டது.
இதையடுத்து தில்லி மாநகரப் பேருந்துகளில் நவம்பர் 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை இலவசப் பயணத் திட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தில்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கலோட் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.