சிதம்பரம், ராகுல் விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் மற்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ஆகியோரது விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன்,  சனிக்கிழமை பதிலடி அளித்தார்.
சிதம்பரம், ராகுல் விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

நாட்டின் 23-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 178 பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்தார். அதில் அவர் கூறியதாவது, ''நான் அன்றே கூறியது போன்று தற்போது தான் இந்த 18 சதவீத முறை ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் எனது கருத்து நிரூபனமாகியுள்ளது. இதற்காக நாம் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தான் நன்றி கூற வேண்டும். நாடாளுமன்றத்தாலும், பொதுமக்களாலும் செய்ய முடியாததை இந்த குஜராத் தேர்தல் செய்து முடித்து விட்டது'' என்றார்.

குஜராத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரசாரம் செய்து வரும் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல், பாஜக-வை கடுமையாகச் சாடி வருகிறார். குறிப்பாக அங்கு கட்டப்பட்டுள்ள நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை குஜராத்தில் வசித்து வரும் முக்கிய 10 தொழிலதிபர்களின் பயன்பாட்டுக்கானது என்று விமர்சித்துள்ளார். மேலும், அங்கு தொடர்ந்து வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டு வருவதாகவும், எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை என்றும் கூறினார். 

இந்நிலையில், குஜராத் தேர்தலை முன்னிட்டு அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

நரேந்திர மோடியின் அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரியானது (ஜிஎஸ்டி) அனைத்து கட்சிகளின் அனுமதியோடுதான் அமல்படுத்தப்பட்டது. அதில் உள்ள சிரமங்களை நீக்கி மாற்றத்தை ஏற்படுத்த பாஜக எப்போதும் தயாராக உள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று கூட அதைத் தான் சரியாகச் செய்தார். ஜிஎஸ்டி முறையானது மக்களின் மீதான வரிச்சுமையைப் போக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. அதில் அவர்களுக்குத் தேவையான அனைத்து மாறுதல்களும் சரிவரச் செய்யப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதனை அரசியலாக்கி ஆதாயம் தேடுகிறது.

மத்திய அரசில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது குஜராத் மாநிலத்துக்கான எவ்வித உதவிகளையும் செய்யவில்லை. இங்கு வளர்ச்சி ஏற்படுத்த காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை. அவர்கள் நர்மதை ஆற்றின் குறுக்கே அணை கட்ட எவ்வித முயற்சியிலும் ஈடுபடவில்லை. இந்த அணை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் மொர்ராஜி தேசாய், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் மட்டும்தான் என்றார்.

குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் வருகிற டிசம்பர் 9 மற்றும் 14-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com