தில்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுவை கட்டுப்படுத்த, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு ஆணையம் (இபிசிஏ) தில்லி அரசுக்கும், மாநகராட்சிகளுக்கும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
அதன்படி, நகரில் அடுத்த வாரம் 5 நாள்களுக்கு வாகன கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்துவதற்கு, தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
ஒற்றைப்படை பதிவெண் கொண்ட வாகனங்கள் ஒரு நாளும், இரட்டைப் படை பதிவெண் கொண்ட வாகனங்கள் மறுநாளும் இயங்க அனுமதிக்கும் இத்திட்டமானது, தில்லியில் ஏற்கெனவே இரு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயம், 'வாகனக் கட்டுப்பாடு திட்ட அமலாக்கத்தால், தில்லியில் காற்று மாசு குறையவில்லை. காற்று மாசு கட்டுப்படுத்துவதற்கு, உச்ச நீதிமன்றமும், பசுமைத் தீர்ப்பாயமும் 100-க்கும் மேற்பட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ள போதிலும், வாகன கட்டுப்பாடு திட்டத்தை மட்டும் அரசு தேர்ந்தெடுப்பது ஏன்? கடந்த ஓராண்டில் காற்று மாசு குறைக்க தில்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று குற்றம்சாட்டியது.
இந்நிலையில், வாகன கட்டுப்பாடு திட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக தில்லி அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தில்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கேலோட் வெளியிட்டார்.