ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு வாரமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளனர்.
33 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராஜஸ்தானில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, மருத்துவர்களுடன் மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையானது, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி, இரவு 11 மணி வரை நீடித்தது. பேச்சுவார்த்தையில் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதற்கு ஒப்புக் கொண்டனர்.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநில அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சங்கத் தலைவர் அஜய் சௌதரி கூறுகையில், "எங்களது கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை அரசு ஏற்றுக் கொண்டுவிட்டது; சில கோரிக்கைகளுக்கு தீர்வைக் காண்பதற்கு, உயர் நிலைக் குழுவுக்கு அவை அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து மருத்துவர்களும் பணிக்குத் திரும்பியுள்ளனர்' என்றார்.