கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி: உச்ச நீதிமன்றம்

வெளிநாடு சென்று வர கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி: உச்ச நீதிமன்றம்


புது தில்லி: வெளிநாடு சென்று வர கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அதில், டிசம்பர் 1 முதல் 10ம் தேதி வரை வெளிநாடு செல்ல கார்த்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், வெளிநாடு சென்றால் டிசம்பர் 10ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்றும், டிசம்பர் 10ம் தேதிக்குள் நாடு திரும்பாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு, ப.சிதம்பரம், நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்காக, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் அனுமதி பெற்றதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

அதற்கு உடந்தையாக செயல்பட்டதாக, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ கடந்த மே மாதம் வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, சிபிஐ பல முறை அழைப்பாணை அனுப்பியும், அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. இதனிடையே, அவரை கண்காணிக்கப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அவர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தனது மகனின் படிப்பிற்காக வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் கோரியிருந்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com