சுகோய் ரக போர் விமானத்தில் இருந்து தாக்கும் வல்லமை படைத்த புதிய ரக பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
சுகோய்-30 ரக போர் விமானத்தில் இருந்து இந்த புதிய ரக சூப்பர்ஸானிக் க்ரூஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
வங்காள விரிகுடா கடற்பகுதியில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. 2.5 டன் எடையுள்ள இந்த ஏவுகணை தான் இந்திய விமானப்படையில் அதிக எடை கொண்ட அதிபயங்கர ஏவுகணையாகத் திகழ்கிறது.
பிரம்மோஸ் வடிவமைப்புக்குழுவைச் சேர்ந்த நிர்வாக இயக்குநர் டாக்டர் சுதில் மிஸ்ரா, தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரி, மூத்த விமானப்படை அதிகாரிகள், டி.ஆர்.டிஓ. அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் இச்சோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
இந்தப் புதிய ரக ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இதன்மூலம் இந்தியா உலகளவில் சாதனைப் படைத்துள்ளது. இதனால் சுமார் 300 கி.மீ. வரை எதிரி நாட்டினைச் சென்று தாக்கும் வல்லமை படைத்தது.
இந்தியப் போர் விமானத்தில் இருந்து இந்த நவீன ரக ஏவுகணை செலுத்தும் நிலையானது பாதுகாப்புத்துறையின் மிகச் சிறந்த மைல்கல்லாகும். எனவே இனிவரும் காலங்களில் பிரம்மோஸ் ஏவுகணைகளை ராணுவம், கப்பற்படை, விமானப்படை என மூன்று பிரிவுகளிலும் பயன்படுத்த இயலும். இது மகத்தான முன்னேற்றமாகும்
இதற்கான தலைசிறந்த பங்களிப்பை அளித்துள்ள டி.ஆர்.டிஓ. மற்றும் பிரம்மோஸ் தயாரிப்பு அணி ஆகியோருக்கு வாழ்த்துகள் என்றார்.
டி.ஆர்.டி.ஓ. தலைவர் டாக்டர் எஸ்.கிறிஸ்டோஃபர் மற்றும் அந்தப் பிரிவின் மூத்த அதிகாரிகளும் இந்த மகத்தான சாதனை குறித்து வாழ்த்து தெரிவித்தனர்.