ஹவேரி: கர்நாடக மாநிலத்தில், பிரசவத்தின் போது மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்து இறுதிச் சடங்குகள் நடந்த போது கண் திறந்து பார்த்த பெண், மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேவரகுட்டா கிராமத்தைச் சேர்ந்த நாகவேணி கொடேரா (25) என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அந்த கிராமத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பிறகு அவர் மகப்பேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ரத்த அழுத்தம் குறைந்து அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து, வீட்டுக்குக் கொண்டு வரப்பட்ட நாகவேணிக்கு இறுதிச் சடங்குகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்போது அவர் கண் திறந்து பார்த்துள்ளார். கை, கால்களையும் அசைத்துள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் மீண்டும் அறிவித்துவிட்டதால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.