தொலைநிலைக் கல்வி மூலம் பொறியியல் படிப்பு பயின்றவர்களுக்கு 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கியுள்ள பட்டங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.
தமிழகத்தில் உள்ள விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன், அலாகாபாத் வேளாண் கல்வி நிறுவனம், ராஜஸ்தானைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் இன் எஜுகேஷன், ஜேஆர்என் ராஜஸ்தான் வித்யாபீடம் ஆகியவை அந்தப் பல்கலைக்கழகங்களாகும்.
இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றம் இந்த மாதத் தொடக்கத்தில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பல்கலைக்கழக மானியக் குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் 2018-19-ஆம் கல்வியாண்டில் இருந்து, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் முறையான ஒப்புதலின்றி, தொலைநிலைக் கல்வி முறையில் பொறியியல் கல்வியை நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தொடரக் கூடாது என்று உத்தரவிட்டது. மேலும், 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வழங்கிய பொறியியல் பட்டங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் பி.கே.தாக்குர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
அந்தப் பட்டங்களைப் பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும். அவர்கள் தேர்வில் வெற்றி பெற இருமுறை மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படும் என்று பி.கே.தாக்குர் கூறினார்.