மும்பை: மும்பை எல்பின்ஸ்டன் ரோடு ரயில் நிலைய நடை மேம்பால விபத்தில் பலியானோரின் சடலங்களின் நெற்றியில் எண் இட்ட மருத்துவர் மீது சிவசேனா கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
மும்பை எல்பின்ஸ்டன் ரோடு ரயில் நிலைய நடை மேம்பாலத்தில் நேற்று முன்தினம் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட விபத்தினால் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பலியானவர்களின் சடலங்கள் அடையாளம் காணும் பொருட்டு அரசு மருத்துவமனையில் வைக்கபட்டிருந்தன. அப்பொழுது அடையாளம் காண்பதற்கு உதவும் பொருட்டு பிரேத பரிசோதனை அறை ஊழியர்கள் சடலங்களின் நெற்றிகளில் 1,2,3.. என எண்ணால் எழுதி இருந்தனர்.
இது பலியான மக்களின் குடும்பத்தினர் இடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. மருத்துவமனையின் இச்செயலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் பரவலாக எதிர்ப்பு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று பிரேத பரிசோதனை பகுதிக்குள் சிவசேனா கட்சியினர் சிலர் நுழைந்தனர். அவர்கள் அங்கு பணியில் இருந்த டாக்டர் ஹரிஷ் பாதக்கை தாக்கினர். மேலும் சடலகங்களுக்கு எழுதப்பட்டதினைப் போன்று அவரது நெற்றியிலும் எண்னை எழுத முயன்றனர். தாக்குதலில் ஈடுபட்ட ஐவரில் இரண்டு பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம குறித்து மருத்துவர் ஹரிஷ் பதாக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பொழுது எழும் குழப்பங்களை தடுக்கும் பொருட்டு உயிரிழந்தவர்களின் சடலங்களை முதலில் புகைப்படம் எடுத்தோம். பின்னர் எண்ணால் நெற்றியில் எழுதினோம், பின்னர் தகவல் பலகை வைக்கப்பட்டது.
ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை முடிந்ததும் எண் அழிக்கப்பட்டு விட்டது. அடையாளம் காணும் பணியினை விரைவாகவும், கௌரவமாகவும், எளிதான முறையிலும் அடையாளம் காண மருத்துவமனையின் சார்பில் எடுக்கப்பட்ட முடிவு இது. இதனை விமர்சனம் செய்வதும் தாக்குதல் நடத்துவதும் சரியானது அல்ல.
இவ்வாறு மருத்துவர் ஹரிஷ் பதாக் தெரிவித்துள்ளார்.