வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பாஜக கவுன்சிலரை அப்பகுதி பொதுமக்கள் கட்டி வைத்து உதைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தின் முன்னால் அனுமதியின்றி சில குடிசைகள் கட்டப்பட்டு அதில் சிலர் வசித்து வந்தனர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அந்த குடிசைகளை நேற்று இடித்து தள்ளினர்.
மாநகராட்சியின் இந்த முடிவுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பகுதியில் திரண்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கிருந்த பாஜக உள்ளூர் கவுன்சிலர் ஹஸ்முக் படேலிடம் வாக்குவாதம் செய்தனர். முன் அறிவிப்பின்றி எப்படி நடவடிக்கை எடுக்கலாம்? என கேட்டு தகராறு செய்தனர்.
குடிசைகளை இடிப்பது குறித்து தனக்கும் எந்த நோட்டீசும் வரவில்லை என பாஜக கவுன்சிலர் கூறினார். அறிவிப்பு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கவுன்சிலர் ஹஸ்முக் படேலை இழுத்துச் சென்று தாக்கத் தொடங்கினர். அதன்பின்னர் அவரை அருகிலுள்ள மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். குடிசைகள் இடிப்பது குறித்த அறிவிப்பு குறித்து மக்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பி தாக்கினர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் அடங்கிய வீடியோ அப்பகுதியில் உள்ள சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைதொடர்ந்து, பாஜக கவுன்சிலரை தாக்கியது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக 30க்கு மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் பாஜக கவுன்சிலரை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் உதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.