புது தில்லி: அரசின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்க உரிய நிறுவனம் கிடைத்துவிட்டால் இந்த நிதியாண்டிலேயே விற்றுவிட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னணி நிறுவனங்கள் பலவும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் விஷயத்தில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இந்த விற்பனை மூலமாக பவன் ஹன்ஸ், என்சிசிஐஎல் உள்ளிட்டவற்றின் முதலீடுத் தொகையான ரூ.72,500 கோடிகளை நடப்பு நிதியாண்டிலேயே திரும்பப் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, இது குறித்து மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட முக்கியத் துறை அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர்.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் சுமை இருக்கிறது. ஏர் இந்தியா நிறுவனம் உலக அளவில் சுமார் 40 சர்வதேச வழித்தடங்களில் தங்களது விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது. உள்நாட்டில் சுமார் 70 வழித்தடங்களில் தங்களது விமான சேவையை மேற்கொண்டு வருகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 5 துணை நிறுவனங்கள் உள்ளன. அது ஒரே ஒரு நிறுவனத்தோடு கூட்டணி வைத்தும் செயல்படுகிறது.