சாமானியனுக்கு சங்கடம் விளைவிப்பதுதான் மோடி, ஜேட்லிக்கு வேலை: காங்கிரஸ் கடும் தாக்கு

சாமானிய மக்களுக்கு சங்கடம் விளைவிப்பதுதான் மோடி, ஜேட்லி வேலையாக இருப்பதாக ஜிஎஸ்டி விவகாரத்தில் காங்கிரஸ் தரப்பில் கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டது.
சாமானியனுக்கு சங்கடம் விளைவிப்பதுதான் மோடி, ஜேட்லிக்கு வேலை: காங்கிரஸ் கடும் தாக்கு

22-ஆவது சரக்கு மற்றும் சேவை வரி மீதான ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 27 பொருட்களின் மீதான வரியை குறைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.

கடந்த ஜூலை மாதம் முதல் அமலில் இருக்கும் இந்த ஜிஎஸ்டி விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகினர்.

இந்நிலையில், நடைபெற்று முடிந்த இந்த ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இனி வரும் காலங்களில் ஜிஎஸ்டி மீதான குழப்பங்களைப் போக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக சாமானிய மக்களை எப்போதும் சங்கடத்தில் ஆழ்த்துவதுதான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோருக்கு முக்கிய வேலை என விமர்சித்துள்ளது.

இந்த ஜிஎஸ்டி விவகாரத்தில் உள்ள குறைகளை காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே தெரிவித்து வருகிறது. ஆனால் அதனை சரிசெய்வதில் மத்திய பாஜக அரசு தயக்கம் காட்டியது.

தற்போது அதில் சிறிதளவிலாவது மாற்றம் ஏற்படுத்தி மக்களின் நிலையை பாஜக உணர்ந்தால் மகிழ்ச்சிதான் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சந்தீப் தீக்ஷித் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி விவகாரத்தில் அதில் உள்ள தவறுகளை திருத்தி அவசர காலத்தில் அல்லாமல் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்கும்படி காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

இதனால் மக்களுக்கு எந்த விதத்திலும் சங்கடம் ஏற்படக்கூடாது என்றும் எச்சரித்தோம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் ஷர்மா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com