பனாஜி: தந்தை மொபைல் வாங்கித் தர மறுத்ததால் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவா மாநில தலைநகர் பனாஜியிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள கிராமம் சங்கலிம். இந்த கிராமத்தில்தான் நேற்று அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 17 வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தையிடம் தனக்கு ஒரு மொபைல் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரது தந்தை மறுத்து விட்டு, அந்த பெண்ணின் சகோதரியை கல்லூரியில் கொண்டு விட சென்று விட்டார்.
இதன் காரணமாக அந்த இளம்பெண் மிகவும் வருத்தத்துடன் இருந்துள்ளார். அவரது தாய் குளிக்கச் சென்ற சமயத்தில் அந்த பெண் தனக்குத் தானே நெருப்பு வைத்துக் கொண்டுள்ளார். குளியல் அறையிலிருந்து அவரது தாய் வந்து பார்த்த பொழுது, இளம்பெண் நெருப்பில் சிக்கி தவித்துக் கொண்டுள்ளார். உடனடியாக அவரை கிராம சமுதாய சுகாதார மையத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்தப் பெண் இறந்து விட்டார்.
இது தொடர்பாக சங்கலிம் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.