மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் (எஃப்.டி.ஐ.ஐ.) புதிய தலைவராக ஹிந்தி நடிகர் அனுபம் கெர்(62) புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.
இக்கல்வி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் கஜேந்திர சௌஹானின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைவதை முன்னிட்டு, இந்தப் புதிய நியமனத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் செய்துள்ளது.
இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் அனுபம் கெர், தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர் ஆவார்.
இதுவரை சுமார் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
சிறந்த குணச்சித்திர நடிகர் எனப் பெயர் பெற்ற அனுபம் கெர், நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்புத் திறமையைப் பாராட்டி, அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது.
இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அனுபம் கெருக்கு, திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அனுபம் கெர் தனது சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில், 'புணே திரைப்படக் கல்வி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதை மிகப்பெரிய கௌரவமாக உணர்கிறேன்; எனது பதவிக்குரிய பணிகளை என்னால் இயன்றவரை சிறப்பாக செய்வேன்' என அவர் தெரிவித்துள்ளார்.