லாரி ஓட்டுநர்களில் 70 சதவீதம் பேருக்கு கண்பார்வை பலவீனமாக இருப்பது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
குருகிராமில் கெர்க்கி தௌலா நெடுஞ்சாலை சுங்கக் கட்டண வசூலிப்பு மையத்தில் அண்மையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் லாரி ஓட்டுநர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அப்போது, லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் உள்ளிட்ட உதவியாளர்கள் பலருக்கு பார்வையில் பலவீனம் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த முகாமில் கண் மருத்துவர்கள் சுமார் 700 லாரி ஓட்டுநர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் கண் பரிசோதனை செய்தனர். அவர்களில் 500 பேருக்கு கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. பரிசோதிக்கப்பட்ட ஓட்டுநர்களில் 50 பேருக்கு 20-30 மீட்டர் வரையிலான தூரம் வரை கூட தெளிவான பார்வை இல்லை என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து முகாமில் பங்கேற்ற கண் மருத்துவர் வருண் குமார் கூறுகையில், "700 லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள், உதவியாளர்கள்ஆகியோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 500 பேருக்கு பலவீனமான பார்வை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன' என்றார்.
இதுபோன்ற கண்பார்வை பிரச்னைகள் கூட சாலை விபத்து ஏற்பட ஒரு காரணமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 400 சாலை விபத்துகள் நிகழ்கின்றன.
எனினும், சாலை விபத்துகளுக்கும், பலவீனமான பார்வைக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து தேசிய அளவில் அதிகாரப்பூர்வ ஆய்வு நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், குருகிராமில் லாரி ஓட்டுநர்களுக்காக நடத்தப்பட்ட கண் பரிசோதனை முகாம் இதற்கான தேவையை உணர்த்துவதாக உள்ளது.