புது தில்லி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
செப்டம்பர் 30ம் தேதிக்குள் புதிய காசோலையை வாங்க மறந்த வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம். ஏன் என்றால், காசோலைகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, எஸ்பிஐ வங்கியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்கள், டிசம்பர் 31ம் தேதிக்குள் புதிய காசோலைக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். அதாவது, பழைய காசோலைகள் டிசம்பர் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம், எஸ்பிஐ வங்கி, அதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் வாடிக்கையாளர்கள் தற்போது வைத்திருக்கும் காசோலைகள் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும், ஐஎஃப்எஸ் கோட் மாறுவதால், அதன்பிறகு புதிய காசோலைக்கு விண்ணப்பித்து பெற்றுப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.