மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை (அக்.2, 2019) ஆண்டுமுழுவதும் கொண்டாடுவதற்கு ஒத்துழைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலாசாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மகாத்மா காந்தியின் 150 -ஆவது பிறந்த தினத்தை நாடு முழுவதும் மற்றும் சர்வதேச அளவில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. காந்திஜியின் கருத்துகளை பிரசாரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான யோசனைகளை வழங்கவும், வழிகாட்டவும், மேற்பார்வை செய்யவும் பிரதமர் மோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், அனைத்து மாநில முதல்வர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், காந்தியவாதிகள், சமூகத்தில் மிக முக்கியமானவர்கள் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.