மகளிருக்கென்று தனி பயற்சி வகுப்பைத் தொடங்கும் திட்டமில்லை என்று ஆர்எஸ்எஸ் மறுத்துள்ளது.
முன்னதாக, ஆர்எஸ்எஸ் அமைப்பில் பெண்களுக்கென்று பிரிவைத் தொடங்கி பயிற்சி அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மன்மோகன் வைத்யா கூறியதாக செய்தி வெளியானது.
ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பு சுட்டுரை (டுவிட்டர்) மூலம் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆர்எஸ்எஸ் பெண்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாக தவறான தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஆண்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் மூலம் அவர்களது குடும்பத்தினரை அணுகுவோம் என்றுதான் வைத்யா கூறியிருந்தார். மகளிருக்காக ஏற்கெனவே ராஷ்டிர சேவிகா சமிதி அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த பெண்கள் மூலம் அவர்களது குடும்பத்தின் ஆதரவை ஆர்எஸ்எஸ் பெறும் என்றார்.
முன்னதாக, ஆர்எஸ்எஸ் அமைப்பில் பெண்களுக்கு இடமில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பெண்களுக்கும் பயற்சி அளிக்க இருப்பதாக வைத்யா கூறியதாக செய்தி வெளியானது.