மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் அமைந்துள்ள புதிய விமான நிலையத்துக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் விரைவில் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.
அகமது நகர் மாவட்டம், ஷீரடியில் புகழ்பெற்ற சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. அந்த நகரில் கட்டப்பட்ட விமான நிலையத்தை கடந்த 1-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
நாட்டில் உள்ள 59 விமான நிலையங்களிலும் சிஐஎஸ்எஃப் வீரர்கள்தான் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஷீரடியில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வருவார்கள் என்பதாலும், புகழ்பெற்ற ஆன்மிக தலம் இருப்பதாலும் பயங்கரவாத அச்சுறுத்தல் வர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இதையடுத்து, சிஐஎஸ்எஃப் பாதுகாப்பின் கீழ் விரைவில் ஷீரடி விமான நிலையமும் கொண்டு வரப்பட உள்ளது.
ஷீரடி விமான நிலையத்துக்கு விரைவில் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அதன் பொது இயக்குநர் ஓ.பி.சிங் தெரிவித்தார். ஷீரடி கோயிலுக்கு தினமும் சுமார் 60ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அந்தமான்-நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில் அமைந்துள்ள இஸ்ரோவின் ஐஎஸ்டிஆர்ஏசி அமைப்பை தமது பாதுகாப்பின் கீழ் சிஐஎஸ்எஃப் புதன்கிழமை கொண்டுவந்தது.