கர்நாடகாவின் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர் தேர்வில், வசூல்ராஜா எம்பிபிஎஸ் பாணியில் காப்பியடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேர்வு மையத்துக்கு அருகே இருக்கும் விடுதி ஒன்றில் இருந்து, இயர்ஃபோன் வழியாக தேர்வெழுதுவோருக்கு விடைகள் கிடைப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, தேர்வு மைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். விடைகளை செல்ஃபோன் மூலமாக அளிக்க, ரூ.11.5 லட்சம் அளிக்க ஒப்புக் கொண்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் செய்த சதித் திட்டம் குறித்து காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து இரு வேறு மையங்களில் தேர்வெழுதிய 3 பேரும் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மூன்று பேரிடமும் இருந்து இயர்ஃபோன்கள், செல்போன்கள், ஸ்பீக்கர் மற்றும் இதர சாதனங்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். வெளியில் இருந்து விடைகளை அளித்த குற்றவாளி பிரதீப்பை தேடி வருகிறார்கள்.
காதுக்குள் யாருக்கும் தெரியாத வகையில் இயர்போனை இந்த மூன்று பேரும் பொருத்தியிருந்தனர். சட்டைக்குள் மறைத்திருந்த ஸ்பீக்கர் வசதியுடன் கூடிய செல்போன் மூலமாக இவர்கள் கேள்விகளைச் சொல்ல சொல்ல, இயர்போன் வழியாக விடைகள் கிடைக்கும் வகையில் இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.