'குஜராத் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல், பாஜகவுக்கு கெளரவப் பிரச்னையாகும். எனவே, பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும்' என்று கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
குஜராத் மாநிலத்தில் அரசின் சாதனை விளக்கப் பேரணியின் நிறைவு நாள் பொதுக் கூட்டம், காந்தி நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது: 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு வரும் டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக, பிரதமர் மோடி பதவி வகித்தார். அந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில், 129 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
ஆனால், தற்போது மோடி பிரதமராகிவிட்டார். எனவே, அதற்கேற்ப பாஜகவை நாம் வெற்றிபெறச் செய்தாக வேண்டும். குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல், நமக்கெல்லாம் கெளரவப் பிரச்னையாகும். 2002-ஆம் ஆண்டில் பெற்ற மூன்றில் இரண்டு பங்கு வெற்றி, தற்போதைக்கு போதாது. எனவே, இந்தத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற வேண்டும்.
அதற்காக, பாஜக தொண்டர்கள் அனைவரும், தீபாவளிக்குப் பிறகு, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் நேரில் சந்தித்து, மோடியின் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துக் கூறி, பாஜகவின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டும்.
இந்த மாநிலத்தின் மீது சிலர் (ராகுல் காந்தி) போலியாக கவலை கொள்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில், அவர்களை இந்த மாநிலத்தில் பார்க்க முடியவில்லை. ஆனால், தேர்தல் நெருங்குவதையொட்டி, மாநிலம் முழுவதும் அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்கள்.
கோயில், குளம் என ஏறி, இறங்குகிறார்கள். இந்தத் தேர்தலில், மாநிலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியை அகற்றுவற்கு பாஜக தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றார் அமித் ஷா.