விமானப் பயணிகளின் பைகளில் இருக்கும் பொருட்களை விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் திருடும் விடியோ காட்சியை மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பகிர்ந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்ட இந்த விடியோக்களில், விமானப் பயணிகளின் உடைமைகளை, விமான நிலைய ஊழியர்கள் எவ்வாறு திருடுகிறார்கள் என்ற காட்சி பதிவாகியுள்ளது.
பொதுவாகவே விமானப் பயணிகள், தங்கள் பயணத்தின்போது உடமைகள் பத்திரமாக இருப்பதாகவே உணர்வோம். ஏன் என்றால், அவை சீல் வைக்கப்பட்டிருக்கும். அதனை யாரும் அகற்ற முடியாது என்பதே. ஆனால் உண்மை அவ்வாறு இல்லை.
மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், சமூகதளத்தில் பகிர்ந்துள்ள விடியோவில், "விமானத்தில் கொண்டு செல்லும் நமது உடைமைகள் பத்திரமாக இருக்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
விமான ஊழியர்கள் சிலர் விமானத்தில் ஏற்றப்பட்ட உடைமைகளைத் திறந்து பொருட்களை திருடும் காட்சி அந்த விடியோக்களில் இடம்பெற்றுள்ளது. இந்த விடியோக்களைப் பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.