ஹிமாசலப் பிரதேச தேர்தல் அறிவிப்புடன், குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவிக்காததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது.
அண்மையில், ஹிமாசலப் பிரதேசத்துக்கு தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த விவகாரம் குறித்து பிரஃபுல் தேசாய் என்பவர் சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், குஜராத், ஹிமாசலப் பிரதேச தேர்தல் தேதிகளை கடந்த இரு தேர்தல்களின்போதும் ஒரே சமயத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், இந்த முறை குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்தில் தேர்தல் தேதியை ஆணையம் அறிவிக்கவில்லை. இதன் மூலம் குஜராத் மாநில பாஜக அரசு, தேர்தலைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களை மக்களுக்கு அறிவிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. எனவே, இதனை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், நீதிபதி ஏ.ஜே.சாஸ்திரி தலைமையிலான அமர்வு இந்த மனுவை நிராகரித்துவிட்டது.