பீகாரின் நலந்தா தொகுதி அம்மாநில முதல்வர் நிதீஷ் குமாரின் சொந்தத் தொகுதியாகும். இப்பகுதியில் உள்ள நூர்சாராய் எனுமிடத்தில் உள்ளது அஜய்பூர் கிராமம். இங்கு வியாழக்கிழமை ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த கிராமத்தில் வசிக்கும் முதியவர் ஒருவர் பஞ்சாயத்து தலைவர் இல்லத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு அனுமதியின்றி நுழைந்ததாக அவருக்கு கொடூர தண்டனை வழங்கப்பட்டது.
அந்த இல்லத்தில் ஆண்கள் யாரும் இல்லாத நேரத்தில் சென்றதால் அந்த முதியவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் அவர் அரசு தரப்பில் வழங்கப்படும் சலுகை தொடர்பான விவரங்களைப் பெறவே அங்கு சென்றதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அந்த இல்லத்துக்குச் சென்ற முதியவர் மீது உடனடியாக பஞ்சாயத்தில் குற்றஞ்சாட்டப்படுகிறது. பின்னர் அங்கிருந்த பெண்களைக் கொண்டு காலணிகளால் அடிக்கப்படுகிறார்.
இதையடுத்து அதே காலணிகளை அவரது நாக்கைக் கொண்டு சுத்தம் செய்யுமாறு தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக உண்மை நிலை கண்டறியப்பட்டு, இதுபோன்ற கொடூர செயலைச் செய்த குற்றவாளிக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என பீகார் அமைச்சர் நந்த் கிஷோர் யாதவ் தெரிவித்தார்.