கொல்கத்தாவில் 19 மாடிக் கட்டடத்தில் வியாழக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம் அடைந்தன.
கொல்கத்தா நகரின் மையப்பகுதியில், ஜவாஹர் லால் நேரு சாலையில் அந்த 19 மாடிக் கட்டடம் உள்ளது. அந்தக் கட்டத்தில் ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகமும், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், கட்டடத்தின் 16-ஆவது தளத்தில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் கணினி கட்டுப்பாட்டு அறையில், வியாழக்கிழமை காலை 10.20 மணியளவில் தீ
விபத்து ஏற்பட்டது. மற்ற தளங்களுக்கும் தீ வேகமாகப் பரவியதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
சம்பவ இடத்துக்கு 11 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.
தீபாவளியை முன்னிட்டு விடுமுறை தினம் என்பதால், இந்த கட்டடத்துக்குள் ஆள்கள் யாரும் வரவில்லை.
கணினி கட்டுப்பாட்டு அறை இயங்கி வரும் தளத்தில் யாரும் சிக்கியிருப்பதாகத் தகவல் இல்லை என்று பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் பி.பி.சென்குப்தா கூறினார். இந்த விபத்தில், அலமாரிகளும், கணினி பாகங்களும் எரிந்து சேதம் அடைந்தாலும், அவற்றில் உள்ள தகவல்களை, மும்பையிலும், கொல்கத்தாவிலும் உள்ள தகவல் சேமிப்பு மையத்தில் இருந்து பெற்று விடலாம் என்று பாரத ஸ்டேட் வங்கியின் சர்வதேச மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் வெங்கடேஷ் பரத்வாஜ் கூறினார்.