சூரிய ஒளி மின்தகடு ஊழல் தொடர்பான விசாரணைஅறிக்கையை தாக்கல் செய்வதற்காக கேரள சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முடிவை பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு எடுத்துள்ளது.
மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்தபோது சூரிய ஒளிமின் தகடு முறைகேடு நடைபெற்றது. அதாவது, வீடுகளிலும், அலுவலகங்களிலும் அத்தகைய தகடுகளைப் பொருத்தி மின்உற்பத்தி வசதி ஏற்படுத்தி தருவதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டது.
இதில் தொடர்புடைய சரிதா நாயர் என்பவரைக் கைது செய்து விசாரித்தபோது பல்வேறு விஷயங்கள் வெளியாகின. குறிப்பாக அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக சரிதா நாயர் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தை விசாரிக்க நீதிபதி சிவராஜன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், கடந்த மாதம் தனது விசாரணை அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில், அதனை அந்த மாநில சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக அடுத்த மாதம் 9-ஆம் தேதி பேரவை சிறப்பு அமர்வைக் கூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்கள் மாநில அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் இடம்பெற்றுள்ளன. இதனிடையே, இதுதொடர்பாக முகநூலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட பதிவில், "விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து கேரள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆரிஜித் பாசாயத்திடம் சட்டரீதியாக கருத்து கேட்க முடிவு செய்துள்ளோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவினருடன் செல்லிடப்பேசியில் பேசிய பிரதமர் மோடி
ஆமதாபாத், அக். 19: குஜராத் மாநில பாஜகவினர் 23ஆயிரம் பேருடன் செல்லிடப்பேசியில் ஒரே நேரத்தில் பிரதமர் மோடி பேசினார்.
இதுகுறித்து பாஜக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "ஆடியோ பிரிட்ஜ்' தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே நேரத்தில் பாஜகவைச் சேர்ந்த 23ஆயிரம் பேரை செல்லிடப்பேசியில் பிரதமர் மோடி வியாழக்கிழமை அழைத்து தீபாவளி வாழ்த்து கூறினார். தனது சொந்த மக்களவைத் தொகுதியான உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியைச் சேர்ந்த பாஜகவினர் 2ஆயிரம் பேரிடமும் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவர் வியாழக்கிழமை பேசினார்.
குஜராத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பாஜக மேற்கொண்டுவந்த நலத் திட்டங்கள், மத்திய அரசின் கொள்கைகளில் தற்போது பிரதிபலிக்கின்றன. குஜராத்தில் பாஜக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். கிராமங்கள், நகரங்கள், ஏழைகள், விவசாயிகள், தலித்துகள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் புதிய வாய்ப்புகளை மத்திய அரசு வழங்கி வருகிறது என்று பிரதமர் மோடி பேசினார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.